சசிகலாவுக்கு கொரோனா தொற்று
1 min read
Corona infection to Sasikala
21.1.2021
பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை கடந்த 2020-ம் ஆண்டு செலுத்தினார்.
இதையடுத்து தண்டனை காலம் முடிவடைவதையட்டி சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று அவரது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறினார். இதனால் தான் விடுதலை ஆகப்போகும் தினத்தை சசிகலா ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
மூச்சுத் திணறல்
இந்த நிலையில் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவர் அவதிப்பட்டதை அடுத்து அவருக்கு முதல் கட்டமாக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று(புதன்கிழமை) பவ்ரிங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா
பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரியில் சிடி ஸ்கேன் உள்பட சில வசதிகள் இல்லை. இதனால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று( வியாழக்கிழமை) மாலை 6.30 மணி அளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ‘‘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது. நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை’’ எனத் தெரிவிக்கப்பட்டது.