மதுரையிலும், கேரளாவிலும் அரியவகை எறும்பினம் கண்டுபிடிப்பு
1 min read
Discovery of rare ants in Madurai and Kerala
24/1/2024
பொதுவாக, நாம் சிற்றெறும்பு, கட்டெறும்பு, கடியெறும்பு என கேள்விப்பட்டு இருக்கிறோம். இன்னும் பெயர் தெரியாத எண்ணற்ற எறும்பு வகைகளும் உண்டு. ஆராய்ச்சியாளர்களுக்கே அவை வெளிச்சம்.
இப்போது தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ‘ஊசரே’ (Ooceraea) என்ற புதிய எறும்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயத்திலும், தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் உள்ள அழகர்கோவில் மலையிலும் இந்த எறும்பினம் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கண்டறியப்பட்ட இந்த இன எறும்புக்கு ‘ஊசரே ஜோஷி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில் நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் ஜவகர்லால் நேரு உயரிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைசிறந்த உயிரியலாளரான பேராசிரியர் அமிதாப் ஜோஷியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழக பேராசிரியர் ஹிமேந்தர் பாரதி தலைமையிலான குழு இந்த எறும்பினத்தை கண்டுபிடித்தது பற்றி, “ஜூகீஸ்” என்ற சஞ்சிகையில் கட்டுரை வெளியாகியுள்ளது.
பிறவகை எறும்புகளுக்கும், இதற்கும் என்ன வேறுபாடு எனக்கேள்வி எழுப்பியபோது, “உணர்வு கொம்பு பிரிதலில் இந்த எறும்புகள் பிற எறும்புகளில் இருந்து வேறுபடுகின்றன” என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகர்மலையில் கண்டறியப்பட்ட எறும்பினம், “ஊசரே டெகமேரா” என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப் புதிய எறும்பினம் பற்றிய கூடுதல் விவரங்களை, எறும்பின ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
–மணிராஜ்.