டெல்லி பேரணியில் விவசாயி இறந்ததால் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்
1 min read
ension over farmer’s death at Delhi rally; 144 Enforcement of Prohibition Order
26.1.2021
டெல்லியில் தடையை மீறி விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதில் ஒரு விவசாயி இறந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பஞ்சாப், அரியானா உள்பட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லை பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.
பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் குடியரசு தின விழாவின்போது டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். சுமார் 1 லட்சம் டிராக்டர்கள் அந்தப் பேரணியில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பேரணி
இந்தப் பேரணிக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் ராணுவ அணிவகுப்பு முடிந்த பிறகு டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிள் தெரிவித்தனர். ஆனால் டெல்லி போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கினர்.
சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லை பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தூரம் மட்டுமே பேரணி நடக்க வேண்டும், திக்ரி எல்லையில் இருந்து 63 கிலோ மீட்டர், சிங்கு எல்லையில் இருந்து 62 கிலோ மீட்டர் காஜிபூர் எல்லையில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடத்தலாம், பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும், ஒரு டிராக்டரில் 3 முதல் 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்பன உள்பட 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனால் விவசாய சங்கத்தினர் பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று கூறினா£ர்கள்.
இதையடுத்து போராட்டத்திற்கு ஆயத்தமாவதற்காக விவசாயிகள் டிராக்டரோழ டெல்லியை நோக்கி வந்தனர். இதனால் டெல்லி மற்றும் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குடியரசு தின விழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) டெல்லி எல்லைப் பகுதிகள் மூடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் டிராக்டர்களுடன் விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர்.
கண்ணீர் புகைக்குண்டு
இதற்கிடையே சிங்கு, திக்ரி எல்லை பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றனர். அங்கு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை உடைத்தனர். விவசாயிகளை போலீசார் முன்னேறவிடாமல் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
போலீசாரின் தடையை மீறி டிராக்டர் பேரணியில் பங்கேற்க விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயல்வதால் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தடியடி
போராட்டக்காரர்கள் செங்கோட்டையை முற்றுகையிடும் வகையில் டெல்லிக்குள் நுழையும்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டை கோபுரத்தில் ஏறி விவசாயிகள் சங்க கொடியை நாட்டினர்.
செங்கோட்டையை சுற்றியுள்ள போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம் செங்கோட்டையை சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயி சாவு
இதற்கிடையில் பேரணியின்போது ஒரு விவசாயி இறந்தார். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால்தான் அவர் இறந்தார் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் போலீசார் கூறும்போது, விவசாயிகள் டிராக்டரை கொண்டு தடுப்புகளை அகற்ற முயன்றதாகவும் அப்போது டிராக்டர் கவிழ்ந்துதான் அவர் உயிரிழந்தார் என்றும் கூறுகிறார்கள்.
விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
144 தடை உத்தரவு
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.