சங்கரன் கோவிலில் இருசக்கர வாகன ஷோ ரூமில் தீவிபத்து; ரூ.1 கோடி சேதம்
1 min readFire at two-wheeler showroom at Sankaran temple; Rs 1 crore damage
18/2/2021
சங்கரன்கோவிலில் இன்று காலையில் இருசக்கர வாகன ஷோ-ரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமாகின.
தீவிபத்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரத்தை சேர்ந்தவர் கனகவேல் (வயது 40). இவர் சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையில் பிரபல கம்பெனியின் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் வைத்துள்ளார்.
சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள மிகப்பெரிய ஷோருமான இங்கு 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.
இரு தளங்கள் கொண்ட ஷோரூமில் அடித்தளத்தில் மோட்டார் சைக்கிள்கள் பழுது மற்றும் பின்புறத்தில் சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் விற்பனை மையத்தை ஊழியர்கள் அடைத்து விட்டு சென்றுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணி அளவில் அப்பகுதியில் வந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் விற்பனை மையத்தின் உள்ளே இருந்து புகை வருவதை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு டவுன் போலீசார், ஷோரூம் உரிமையாளர் கனகவேல் ஆகியோர் அங்கு வந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரூ.1 கோடி
அதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கவிதா நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயங்கர தீ விபத்தில் ஷோரூமில் தரைதளத்தில் நிறுத்தி இருந்த அனைத்து மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாயின.
மேலும் முன்புறம் நிறுத்தி இருந்த சில புதிய மோட்டார் சைக்கிள்களும் பகுதி அளவு சேதம் அடைந்தது. சர்வீசுக்கு விடப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமானது. தரைதளத்தில் இருந்த வாகன உதிரி பாகங்கள் அறை முற்றிலுமாக எரிந்தது.
மேலும் ஷோரூமில் இருந்த கம்யூட்டர்கள், அலங்கார விளக்குகள், சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளிட்டவையும் தீயில் எரிந்தன.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ-.2 கோடி மதிப்பிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. மேல் தளத்தில் தீ பரவுவதற்குள் தீயணைப்பு துறையினர் கட்டுப்படுத்தியதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தப்பின. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.