“மத்திய அரசின் ஆட்சி கவிழ்ப்பு வேலையை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்”; நாராயணசாமி பேச்சு
1 min read“People are watching the coup d’tat of the central government”; Narayanasamy speech
22.2.2021
“மத்திய அரசின் ஆட்சி கவிழ்ப்பு வேலையை புதுச்சேரி மாநில மக்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று நாராயணசாமி கூறினார்.
நாராயணசாமி பேச்சு
புதுச்சேரி மாநில நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழந்தது. முன்னதாக சட்டசபையில் நாராயணசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-&
புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி சோனியா காந்தி, கருணாநிதியின் ஆசியாலும், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பேராதரவாலும் நடந்து வருகிறது.
நான் முதல்-&அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை செய்து வருகிறார்கள். இடைத்தேர்தலில் நான் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ், தி.மு.க.வின் ஆதரவோடு வெற்றிபெற்றேன்.
3 தேர்தல்கள்
அதன்பிறகு 3 தேர்தல்களை நான் சந்தித்துள்ளேன். அதில் முக்கியமானது 2019 பாராளுமன்ற தேர்தல். நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 70 சதவீத வாக்குகளை அந்த தொகுதி மக்கள் அளித்து என்னை வெற்றிபெற வைத்தார்கள்.
அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களது காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அதேபோல கூட்டணி கட்சியை சேர்ந்த வெங்கடேசன் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். எங்கள் அணியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் இருந்தன. எதிர் அணியில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகியவை ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்தன. ஆனாலும் எங்கள் அணி வெற்றிபெற்றது.
இது புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. புதுச்சேரி மாநில மக்களுடைய ஆதரவோடும், ஒத்துழைப்போடும் இங்கு அமர்ந்து இருக்கின்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேராதரவோடு தொடர்ந்து நாங்கள் மக்கள் நல திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் நிறைவேற்றி வருகிறோம்.
மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நிதி கிடைக்கவில்லை. மற்றொரு புறம் மத்திய அரசின் நெருக்கடி, இன்னொரு புறம் கிரண்பேடியை துணை நிலை ஆளுநராக நியமித்தது புதுச்சேரி அரசுக்கு தொல்லை.
ஆட்சி கவிழ்ப்பு
இன்னொரு புறம் மத்திய அரசின் ஆட்சி கவிழ்ப்பு வேலை. புதுச்சேரி மாநில மக்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் 5 ஆண்டுகளை நிறைவு செய்த அரசு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் இருப்பது 5 நாளோ, 10 நாளோதான்.
ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களது வேலையை பல ஆண்டுகாலம் காட்டினார்கள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது அஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். நான் எங்களுடைய ஆட்சியில் 4 ஆண்டுகால சாதனைகளை, செயல்பாடுகளை பத்திரிகைகளில் விளம்பரமாக கொடுத்தேன். இருந்தாலும் கூட புதுச்சேரி மாநில மக்களுக்கு அதை நிறைவேற்றும் விதமாக சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.
கடந்த ஆட்சி காலத்தில் விட்டுவிட்டு சென்ற திட்டங்கள், நிறைவேற்றாமல் சென்ற திட்டங்கள், அடிக்கல் நாட்டாமல் சென்ற திட்டங்கள் எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.
புதுச்சேரியில் 4 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 திறக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உப்பனாறு பாலம் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.
காரைக்கால் தொகுதியில் நீதிமன்ற வளாகம் நாங்கள் திறந்து இருக்கிறோம். கடற்கரை சாலையில் நீதிபதிகள் தங்கும் விடுதியை புனரமைத்து திறந்து இருக்கிறோம். புதுச்சேரி மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் 120-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறோம்.
கொரோனா காலத்தில் எங்கள் அரசின் பணிகள் பாராட்டுக்குரியது. உயிரை பணயம் வைத்து அமைச்சர்கள், காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், செயல்பட்டதை புதுச்சேரி மாநில மக்கள் அறிவார்கள்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.