அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகல்; விஜயகாந்த் அறிவிப்பு
1 min readVijayakanth has announced that the DMDK has withdrawn from ADMK alliance.
9.3.2021
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகியதாக – தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தே.மு.தி.க.
நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க ஆரம்பித்தபோது அக்கட்சிக்கு செல்வாக்கு சிறப்பபாக இருந்தது. 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதாவது அந்தத் தேர்தலில் தி.மு.க.வை விட அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது.
ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 3-வது அணியான மக்கள்நல கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்று படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றது. தற்போது, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே தே.மு.தி.க. தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்தை
ஆனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், ஆரம்பம் முதலே தே.மு.தி.க. ஏமாற்றமே இருந்து வந்தது. அ.தி.மு.க. முதன் முதலில் பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி, அக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. வடமாவட்டங்களில் மட்டும் வாக்கு வங்கி வைத்திருக்கும் பா.ம.க.வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது, தமிழகம் முழுவதும் பரவி இருக்கும் தங்கள் கட்சிக்கு அதைவிட கூடுதலாக இடம் வேண்டும் என்றும் தே.மு.தி.க. கேட்டது.
தே.மு.தி.க.வின் கோரிக்கையை அ.தி.மு.க. கண்டுகொள்ளவில்லை. தே.மு.தி.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியதும், தங்களுக்கு, 41 தொகுதிகளை கேட்டது. ஆனால் அதற்கு அ.தி.மு.க. மறுத்துவிட்டது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அ.தி.மு.க. அழைத்தபோது தே.மு.தி.க. செல்லவில்லை. இறுதியில் 15 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று அ.தி.மு.க.க கூறிவிட்டது.
இதனால் அதிர்ச்சி தே.மு.தி.க. அதிர்ச்சி அடைந்தது. நேற்று முன்தினம் இரவு தே.மு.தி.மு.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது அ.தி.மு.க. தரப்பிலோ, 13 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தருவதாக சொல்லப்பட்டது.
விலகல்
இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை அவசர ஆலோசனை நடத்தியது.
இதனை அடுத்து அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&
2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து (9.3.2021) அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.