“காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தானது”- மம்தா ஆவேச பேச்சு
1 min read
“Injured tiger is very dangerous” – Mamta angry speech
14/3/2021
காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தான விலங்கு என்று சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள சட்டசபைக்கு வருகிற 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இத்தேர்தலில் மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தாக்குதல்
அதனை தொடர்ந்து மாலையில் பர்பா மேதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார். அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்தபோது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி காரில் ஏற்றி சென்றனர்.
பின்பு அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரசார பணிகளை மேற்கொள்ள மம்தா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் காலில் ஏற்பட்ட காயத்துடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, காந்தி மூர்த்தி பகுதியில் இருந்து ஹஜ்ரா நோக்கி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.
காயம்பட்ட புலி
பேரணிக்கு பின் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “எங்களுக்கு மக்கள் வாக்களித்தால் ஜனநாயகம் மீண்டும் திரும்புவதை நாங்கள் உறுதிசெய்வோம். வங்காளத்திற்கு எதிரான அனைத்து சதித்திட்டங்களும் அழிக்கப்படும். உடைந்த காலுடன் சர்கர நாற்காலியில் அமர்ந்தபடி நான் தொடர்ந்து பிரசாரம் செய்வேன் என்பதை நான் உறுதியளிக்கிறேன். விளையாட்டு தொடங்கிவிட்டது. காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தான விலங்கு’ என்றார்.