சொத்து தகராறில் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி கைது
1 min read
Brother arrested for shooting brother in property dispute
19.3.2021
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி புத்தூரில் சொத்து தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
சொத்து தகராறு
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியை சேர்ந்த பெரியதாயி என்பவருக்கு நான்கு மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் செல்வம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தற்போது வேடுகாத்தாம்பட்டியில் மனைவி ரேவதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கூலித் தொழில் செய்து வரும் செல்வம், புத்தூர் பகுதிக்கு வந்து தனது தாயாரைச் சந்தித்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி இன்று காலை செல்வம் தாயாரைச் சந்தித்து விட்டு அவரது வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக அவரது தம்பி சந்தோஷ், துப்பாக்கியால் செல்வத்தை சுட்டதாக தெரிகிறது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த கொண்டலாம்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அண்ணன் தம்பி இடையே நிலவி வந்த சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி சந்தோசை போலீசார் கைது செய்தனர். கூலி வேலை செய்துவரும் சந்தோஷ் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.