டாக்டர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு தடை
1 min readChennai High Court bans re-burial of Dr Simon’s body
15.4.2021
கொரோனாவால் இறந்த டாக்டர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு டாக்டர் சாவு
சென்னையை சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ், கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இவரது உடலை, கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டாக்டரின் உடலை அருகில் உள்ள வேலங்காடு சுடுகாட்டில் மாநகராட்சி ஊழியர்கள் புதைத்தனர்.
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் சைமன் ஹெர்குலிசின் மனைவி ஆனந்தி சைமன் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், “வேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட தன் கணவர் உடலை தோண்டி எடுத்து, கிறிஸ்தவ மத சடங்குகளை நடத்தி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய அனுமதிக்கும்படி சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மறு அடக்கம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு சுடுகாட்டில் இருந்து டாக்டரின் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 31-ந் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சி ஆணையர் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், “கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து ஒரு சுடுகாட்டில் இருந்து மற்றொரு சுடுகாட்டில் அடக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தடை
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது சாத்தியமல்ல என உயர் ஐகோர்ட்டு மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதையடுத்து சென்னை மாநகராட்சியின் விளக்கத்தை ஏற்று, தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதிக்கிறது” என்று உத்தரவிட்டனர்.