மகன்களை நரபலி கொடுக்க திட்டம்; தாய், -தந்தை உள்பட 5 பேர் கைது
1 min read
Plan to sacrifice sons; Five arrested, including mother and father
21/4/2021
மகன்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட தாய்-தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜவுளி வியாபாரி
புஞ்சை புளியம்பட்டி சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 43). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி ரஞ்சிதா (36). இவர்களுக்கு தீபக் (15), கிஷாந்த் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரையும் ரஞ்சிதா அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து நரபலி கொடுக்க திட்டமிட்டதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் வந்தது.
இதனை அடுத்து தீபக், கிஷாந்த் ஆகயோரின் பாட்டி பாக்கியம் (60) கடந்த 13-ந்தேதி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
கொடுமை
மகள் ரஞ்சிதா. அவளது கணவர் (மருமகன்) ராமலிங்கம். கடந்த 6 மாதத்துக்கு முன்பு ராமலிங்கம் எனது மகள் ரஞ்சிதா சம்மத்துடன் இந்துமதி (32) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 3 பேரும் ஈரோடு ரங்கம்பாளையம் ரெயில்வே நகரில் வசித்து வந்தனர்.
மேலும் இவர்களுடன் இந்துமதிக்கு பழக்கமான தனலட்சுமி என்கிற சசியும் (39) வசித்து வந்தார். எனது மகள், மருமகன், இந்துமதி, தனலட்சுமி ஆகிய 4 பேரும் கூட்டு சேர்ந்து எனது பேரன்கள் தீபக், கிஷாந்த் இருவரையும் படிக்க விடாமல், பள்ளிக்கூடத்தில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி வந்து விட்டனர். பேரன் கிஷாந்த்திற்கு 6 வயதாகியும் இதுவரை பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை.
எனது பேரன்கள் இருவரையும் வீட்டில் உள்ள துணிகளை துவைக்க வைத்தும், பாத்திரம் கழுவ சொல்வதும், சரியாக வேலை செய்ய வில்லை என்றால் அடித்தும், வெயிலில் நிற்க வைத்தும், உடம்பில் சூடு போட்டும், மிளகாய் பொடி சாப்பாட்டை சாப்பிட வைத்தும் கொடுமை படுத்தியுள்ளனர். இதனை வெளியே சொல்லாமல் இருக்க பேரன்களை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர்.
நரபலி
மேலும், என் மகள் ரஞ்சிதாவின் வீட்டில் இரவு நேரத்தில் கடவுள் வேடம் அணிந்து பூஜைகள் செய்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி இரவு தனலட்சுமி என்கிற சசி, என் மகள் ரஞ்சிதாவிடம் மகன்களை நரபலி கொடுத்தால் கடவுளின் சக்தி கிடைக்கும் என்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதைக்கேட்டு எனது பேரன்கள் பயந்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து புளியம்பட்டியில் உள்ள எங்களது வீட்டிற்கு வந்து விட்டனர்.
இதுபற்றி முறையிட்டபோது ரஞ்சிதா மற்றும் ராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்திருந்தார்.
கைது
இதனை அடுத்து ஈரோடு தாலுகா போலீசார் குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஈரோடு பெருந்துறை ரோடு பவளத்தம்பாளையம் பகுதியில் தாலுகா போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் ராமலிங்கம், அவரது மனைவிகள் ரஞ்சிதா, இந்துமதி மற்றும் தனலட்சுமி என்கிற சசி (38), இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளியை சேர்ந்த மாரியப்பன் (42) ஆகியோர் இருந்தனர். இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் வந்த 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.