இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா 3 லட்சத்தை நெருங்கியது
1 min read
In India, the corona reached close to 3 lakh in a single day
22.4.2021
இந்தியாவில் கொரோனா ஒரே நாளில் 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த தொற்று பாதித்து வருகிறது. நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது நேற்று மட்டும் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது-.
நாட்டில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை, 1 கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனையும் அதிகரித்து உள்ளது.நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் 16 லட்சத்து 39 ஆயிரத்து 357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்தது.
1,716 பேர் சாவு
நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 1,716 பேர் பலியாகி இருந்தனர். நேற்று இந்த எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்தது. அதாவது நேற்று மட்டும் 2 ஆயிரத்து 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 519 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மராட்டியத்தைத் தொடர்ந்து டெல்லியில் 277 பேர், சத்தீஷ்காரில் 191 பேர், உத்தரபிரதேசத்தில் 162 பேர், கர்நாடகத்தில் 149 பேர், குஜராத்தில் 121 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பலிவிகிதம் 1.17 சதவீதமாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க கொரோனாவில் இருந்து குணமாகி வருவதும் அதிகரித்து உள்ளது. நேற்று நாடு முழுவதும் 1 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 39 ஆக அதிகரித்து இருக்கிறது.
நேற்று மராட்டிய மாநிலத்தில் 54 ஆயிரத்து 224 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 19 ஆயிரத்து 430 பேரும், சத்தீஷ்காரில் 18 ஆயிரத்து 746 பேரும், உத்தரபிரதேசத்தில் 14 ஆயிரத்து 391 பேரும் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 85.01 சதவீதம் ஆகும்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 6 லட்சத்து 85 ஆயிரத்து 552 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைந்தபட்ச எண்ணிக்கை என்றால் அந்தமான் நிகோபாரில் 159 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
டெல்லி, மும்பை, ஆமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலகாபாத், சூரத் ஆகிய நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் நிரம்பி விட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளே இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.
ஓட்டல்கள், மைதானங்கள் போன்றவை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்படுகின்றன.
டெல்லியில் புதிதாக 28 ஆயிரத்து 395 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 277 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பலி கொண்டுள்ள டெல்லியில் பல அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.