10ந் தேதி முதல் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
1 min read
MK Stalin launches Rs 2,000 Corona Relief Project from 10th
8/5/2021-
கொரோனா நிவாரண திட்டம் 10-ந் தேதி( திங்கட்கிழமை) தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
கொரோனா நிவார உதவி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல்-அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்றுகொண்டதும். பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண உதவி ரூ.4,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 கோப்புகளில் முதலாவதாக கையெழுத்திட்டார்.
கொரோனா நிவாரண உதவி திட்டத்தில் முதல் தவணையாக மே மாதம் ரூ 2000 வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடங்கி வைக்கிறார்
இதனால் நாளை முதல் அதாவது 10-ந் தேதி முதல் கொரோனா நிவாரண திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:-
10-ந் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. சென்னையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்,
டோக்கன்
ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
இந்த திட்டத்தால் 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 4,153 கோடி செலவிடப்படும். பயனாளிக்கு ரூ 2000 முறையாக போய் சேருகிறதா என்பது கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் முதல் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குடும்பத் தலைவரின் பெயர், நியாய விலைக் கடையின் பெயர், தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போதைக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.