June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்திற்கு டெண்டர் மூலம் தடுப்பூசி இறக்குமதி; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min read

Import of vaccine to Tamil Nadu through tender; MK Stalin’s announcement

12/5/2021
தமிழகத்திற்கு வெளிநாட்டில் இருந்து டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவி்த்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் முன்னதாகவே கொரோனா பரவலை தடுப்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னரும் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் 18 வயதுக்கு மேல் 45 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான தடுப்பூசி மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் தடுப்பூசி போட பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவில்லை.

இறக்குமதி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மு.க.ஸ்டாலின் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அதாவது தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கிலுள்ள முதல் அமைச்சர் அறையில், தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

உலகளாவிய டெண்டர்

அதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள்(டெண்டர்) மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள்(டெண்டர்) கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும்.

ஆக்சிஜன்

மேலும், தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும் போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று முதல் அமைச்சர், பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது.

எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எக்கு உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து தமிழகத்திற்கு ரெயில்கள் மூலமாக ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும், அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திடுமாறு தொழில் துறைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிட்டார்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.