ஊரடங்கு கட்டுப்பாடு கடுமையாகிறது; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
1 min read
Curfew control tightens; Decision at the All-Party Meeting
14.5.2021
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சட்டசபை கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் கூட்டம் கூடியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இதி்ல் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தத் தளர்வுகளை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே, இந்தத் தளர்வுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்பது குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
தீர்மானங்கள்
இதனை அடுத்து பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதனை அடுத்து கூட்டத்தின் முடிவில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்்டன. அவை வருமாறு:-
- கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
கட்சி நிகழ்வுகள்
- நோய் தொற்று வேகமாக பரவிவரும் இக்காலக்கட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியில் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால் கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு மக்களை அறிவுறுத்தி வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
தீவிரப்படுத்த வேண்டும்
- அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அனைத்துக் கட்சி தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.