இந்தியாவில் மாநிலங்களுக்கு தடுப்பூசியை நேரடியாக சப்ளை செய்ய அமெரிக்க நிறுவனம் மறுப்பு
1 min read
US company refuses to supply vaccine directly to states in India
24.5.2021-
தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும்தான் என்றும், மாநிலங்களுக்கு தடுப்பூசி நேரடி சப்ளை இல்லை என்று அமெரிக்க மருந்து நிறுவனமான மார்டனா தெரிவித்துள்ளது.
தடுப்பூசி
18வயது முதல் 44 வயதுக்குள் உள்ள பிரிவினருக்கு தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நாடி உள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் அறிவுறுத்தலின்படி, கொரோனாவுக்கு எதிரான ஸ்புட்னிக்-வி, பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டனர்.
மறுப்பு
ஆனால் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், தங்களது மாடர்னா தடுப்பூசியை நேரடியாக பஞ்சாப் மாநில அரசுக்கு வழங்க முடியாது என தெரிவித்துவிட்டது. மாடர்னா நிறுவனத்தின் கொள்கைப்படி இந்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி கொள்முதல் விவகாரத்தை கையாள முடியுமே தவிர மாநிலங்களுடனோ, தனியார் துறையினருடனோ கையாள முடியாது என கூறிவிட்டனர்.
இந்த தகவலை பஞ்சாப் மாநில அரசின் தொடர்பு அதிகாரி விகாஸ் கார்க் தெரிவித்தார். இதனால் மாநிலங்களுக்கு மாடர்னா நிறுவனம் தடுப்பூசிகளை நேரடியாக சப்ளை செய்யாது என்பது தெளிவாகி உள்ளது.
கெஜ்ரிவால்
இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-
பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை பெறுவது தொடர்பாக நாங்கள் பேசினோம். ஆனால், இரு நிறுவனங்களே எங்களிடம் தடுப்பூசிகளை விற்பனை செய்ய மறுத்துவிட்டன.
இந்திய அரசிடம் மட்டுமே தங்கள் பரிவர்த்தனைகளை வைத்து கொள்வோம் என கூறிவிட்டன. தடுப்பூசிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.