June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கைலாசா மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி; நித்யானந்தா குற்றச்சாட்டு

1 min read

Conspiracy to carry out terrorist attack on Kailash; Nithyananda charge

3/5/2021

கைலாசா மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்திருப்பதாக நித்யானந்தா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

நித்யானந்தா

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றார். இந்த நிலையில் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. இது தொடர்பாக வழக்குகளும் போடப்பட்ட நிலையில், அதனை நித்யானந்தா எதிர்கொண்டு வந்தார்.

கைலாசா

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கைலாசாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வெப்சைட் முகவரியையும் வெளியிட்டார். அங்கு ஓட்டல் தொடங்க மதுரை இளைஞர் ஒருவரும் விண்ணப்பித்தார்.

கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாக கூறி சில நாணயங்களையும் நித்யானந்தா வெளியிட்டார். பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இப்படி கைலாசா நாடு பற்றி புதிது புதிதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன.

தாக்குதலுக்கு சதி

இந்தநிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-

கைலாசா நாட்டின் மீது ‘பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் ‘‘மர்ம விதை’’களை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.

தன்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது.

இவ்வாறு நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா வெளியிடும் வீடியோ பதிவில் சென்று பார்த்தால் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் உண்மையிலேயே கைலாசா என்று ஒரு நாடு உள்ளதா? என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. அதே நேரத்தில் நித்யானந்தா எங்கிருந்து வீடியோ வெளியிடுகிறார் என்பதிலும் மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.