ஒலிம்பிக்ஸ் போட்டி இந்திய வீரர்கள் தயார் நிலை குறித்து மோடி ஆய்வு
1 min read
Modi studies Indian athletes’ readiness for Olympics
3.6.2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜூலையில் தொடங்கவுள்ள, ‘ஒலிம்பிக்ஸ்’ போட்டிகளில் பங்கேற்கும் நம் வீரர்களின் தயார் நிலை மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
ஒலிம்பிக் போட்டி
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், ஜூலை மாதம் 23-ந் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவுள்ள நம் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
இதுவரை, 11 விளையாட்டு பிரிவுகளில், 100 வீரர்கள் வரை தேர்வாகி உள்ளனர். மேலும், 25 வீரர்கள் தேர்வு செய்யும் பணி, விரைவில் முடிவடைய உள்ளன.
மோடி ஆய்வு
இந்த நிலையில், வீரர்களின் தயார் நிலை மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) ஆய்வு செய்தார். ஒலிம்பிக்சில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்களுக்கு, கொரோனா தொற்று நேரத்திலும், தடையில்லா பயிற்சி வழங்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது குறித்தும், பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
”டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன், ஜூலையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாடி, 135 கோடி மக்கள் சார்பில் அவர்களை ஊக்கப்படுத்த உள்ளேன்,” என பிரதமர் மோடி தெரிவித்தார்.