தடுப்பூசி திட்டம், பொருளாதாரம் குறித்து கமலா ஹாரிசுடன் பேசிய பிரதமர் மோடி
1 min read
Prime Minister Modi talks to Kamala Harris about the vaccine program and the economy
4.6.2021
தடுப்பூசி திட்டத்துக்காக அமெரிக்க அரசு மற்றும் வணிக நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள் ஒத்துழைப்பு அளித்ததற்காக கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
தடுப்பூசி
அமெரிக்கா உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பூசிகளின் ஒரு பகுதியை வெளிநாடுகளுக்கு உதவியாக வழங்கி வருகிறது.
ஒரு கோடியே 90 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அதில் 60 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அமெரிக்க நாடுகளுக்கும், 70 லட்சம் தடுப்பூசிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், 50 லட்சம் தடுப்பூசிகள் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இதுதவிர 60 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அமெரிக்கா நேரடியாக கனடா, மெக்சிகோ, இந்தியா, கொரியா ஆகியவற்றுக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளது.
கமலா ஹாரிஸ்
இதை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரதமர் மோடியை திடீரென தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பேசினார். இருவரும் தடுப்பூசி திட்டம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உதவிகள் குறித்து பேசினார்கள்.
இதையடுத்து பிரதமர் மோடி, டுவிட்டரில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பாராட்டு
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்னுடன் பேசினார். அமெரிக்கா சர்வதேச நாடுகளுக்கு தடுப்பூசிகளை உதவியாக வழங்கி வருவதின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் தடுப்பூசி வழங்கும் அமெரிக்காவின் உத்தரவாதத்துக்காக நான் பாராட்டு தெரிவித்தேன்.
தடுப்பூசி திட்டத்துக்காக அமெரிக்க அரசு மற்றும் வணிக நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள் ஒத்துழைப்பு அளித்ததற்காக கமலா ஹாரிசுக்கு நன்றி தெரிவித்தேன்.
இந்தியா-அமெரிக்கா இடையே தடுப்பூசி திட்டத்துக்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது சம்பந்தமாக இரு தரப்பிலும் விவாதித்தோம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ரூ.3,750 கோடி உதவி
இதற்கிடையே அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் கூறும் போது, “இந்தியாவில் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகப்படுத்த தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா இதுவரை ரூ.3,750 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கி இருக்கிறது. தொடர்ந்து தேவையான உதவிகள் வழங்கப்படும்” என்றார்.