தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு-கடைகள் திறக்க அனுமதி
1 min read
Curfew with relaxations in Tamil Nadu extended for another week
5.6.2021
தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் இல்லாத ஊரடங்கு வருகிற திங்கட்கிழமை காலை 6 மணி வரை உள்ளது. இந்த நிலையில் இந்த ஊரடங்கை மேலும் ஒருவார காலம் அதாவது 14-ந் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து உள்ளது.
இதனை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தளர்வுகளையும் வெளியிட்டுளார். அதில் கடைகள் திறப்பு பற்றி கூறியிருப்பதாவது:-
மளிகைக் கடை
- தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் .
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்
- மீன் சந்தைகள் மொத்த விற்பனை சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்கண்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
அரசு அலுவலங்கள்
- அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
- சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்
- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில்வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இபதிவுடன் அனுமதிக்கப்படும்.
- எலெக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுதுநீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
- மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்.
பழுது நீக்கும் கடைகள்
- மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் மட்டும்(விற்பனை நிலையங்கள் அல்ல), காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும் .
- ஹார்டுவேர் ( பேர் பார்ட்ஸ்) கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .
- வாகனங்களின் உதிரிபாக விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம் .
- கல்விப்புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும்(விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்.
வாடகை வாகனங்கள்
- வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் பயணிக்க அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டுபயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்ன ?
கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இம்மாவட்டங்களில் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதிக்கப்படுகிறது.
- தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்களிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக்கடைகள் காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
- மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன்சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்
- இறைச்சிக் கடைகள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்
- அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.
- சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
இபாஸ் அவசியம்
*நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ- பாஸ் பெற்று பயணிக்க வேண்டும்.
- கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுபபுவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
*தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியன விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் - பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.