அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை; பள்ளிகல்வித்துறை அறிவிப்பு
1 min read
First enrollment in government schools tomorrow; School Education Notice
13.6.2021
அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்து உள்ளது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர் 31-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது ஜூன் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன என்றும், 6 கோடி இலவச பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக அனுப்பப்பட்டு விட்டன என்றும், பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் புத்தகங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.
நாளை முதல்…
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாளை முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.