கொரோனா 3-வது அலை-மருத்துவ கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை
1 min read
Corona 3rd Wave-Directorate of Medical Education Warning
15.6.2021
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா 3-வது அலை
இந்தியாவில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த கொரோனாவின் இரண்டாவது அலை இறங்குமுகம் காணத்தொடங்கி இருக்கிறது.
இதற்கிடையில் நாட்டில் கொரோனா இரண்டாம் அலை இறங்குமுகம் கண்ட நிலையில், மூன்றாம் அலையில், குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
மத்திய அரசும் இதுகுறித்து எச்சரித்து வருகிறது. . அதில், நாட்டில் கொரோனா மூன்றாம் அலை, குழந்தைகளை தீவிரமாகத் தாக்கும் என்பதற்கு இதுவரை எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
உத்தரவு
இந்த நிலையில், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குனர்களுக்குச் சுற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
” மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கை வசதிகளும் ஏற்படுத்திடவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்படவேண்டும்.
குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசரக்கால பணிக்காக தயார்ப்படுத்திடவேண்டும். பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களையும் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார்ப்படுத்திடவேண்டும்
கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா 3-வது அலை விரைவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. கொரோனா 3-வது அலையில் 18-வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
100 படுக்கைகள்
இதனால் மருத்துவமனை முதல்வர்கள், இயக்குனர்கள் தயாராக இருக்கவேண்டும். கொரோனா 3-வது அலை எந்நேரமும் தாக்கலாம். இதன்காரணமாக குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்கவேண்டும். குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் பிரேத்யேகமாக தயார் நிலையில் இருக்கவேண்டும்.
ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளும் ஐசியு வசதியுடன் படுக்கைகளும் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். அதேபோல் குழந்தைகள் மருத்துவ பிரிவில் நான்கில் ஒரு செவிலியர் அவசரக்கால பணி செய்யத் தயாராக இருக்கவேண்டும்.
இவ்வாறு மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.