பிஷப்பின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி, கான்வென்டை விட்டு வெளியேற்றம்
1 min read
The nun, who had fought against the bishop’s sexual abuse, was expelled from the convent
15.6.2021
கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற கன்னியாஸ்திரியை, கான்வென்டை விட்டு வெளியேறுமாறு திருச்சபை உத்தரவி்ட்டு உள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு
கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவருக்கு பிஷப்பாக இருந்த பிராங்கோ முலக்கல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுதியது. பிராங்கே முலக்கல், சீரோ மலபார் சபையில் பிஷப்பாக இருந்தவர்.
இவர் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். ‘கேரளாவில் உள்ள கான்வென்டில் தன்னை 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்’ என்று அவர் புகார் சொன்னார்.
இது நாட்டையே உலுக்கினாலும் பிராங்கோ முலக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யக் கோரி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.
ராஜினாமா
வாடிகனுக்கும் புகார் அனுப்பிய நிலையில், பிராங்கோ தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். பிறகு அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா மர்மமான முறையில் இறந்தார். இதைத்தொடர்ந்து பிராங்கோவுக்கு எதிராக 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் திருச்சபையிலும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை முன்னின்று நடத்திய அனுபமா என்ற கன்னியாஸ்திரியை திருச்சபை இடமாற்றம் செய்தது.
லூசி களப்புரா-வின் புத்தகம்
போராட்டக் களத்தில் உடனிருந்த கன்னியாஸ்திரி லூசி களப்புராவை 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சபையை விட்டே நீக்கினர்.
இந்நிலையில் சபையில் தனக்கு நேர்ந்தது, தான் கண்டது என அனைத்தையும் ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற பெயரில் புத்தகம் ஆக்கியுள்ளார் லூசி.
இந்நிலையில் நேற்று முன்தினம், லூசி கலப்புராவிற்கு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை அனுப்பியிருக்கும் கடிதத்தில், ‘உங்கள் பதவி நீக்கத்தை எதிர்த்து முறையீடு செய்யக் கத்தோலிக்க சபைக்குள் ஏந்தச் சட்ட வழிகளும் இனி இல்லை. பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (எப்.சி.சி.,)யின் உறுப்பினராக நீங்கள் தொடர்வதற்கான உரிமை உறுதியாவும் திரும்பப் பெற முடியாத வகையிலும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி நீங்கள் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையின் கான்வென்ட்களில் தங்குவது சட்ட விரோதமானது’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எப்சிசியின் இந்த முடிவுக்கு எதிராக கன்னியாஸ்திரி லூசி கலப்புரா விடுத்த வேண்டுகோளை, வாட்டிகன் தேவாலயம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.