புகார் குறித்து விசாரிக்க “டுவிட்டர்” அதிகாரியை நியமித்தது
1 min read
Twitter appointed an official to investigate the complaint
16.6.2021
மத்திய அரசின் புதிய விதிகளின் படி புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் இடைக்கால அதிகாரியை டுவிட்டர் நிறுவனம் நியமித்துள்ளது.
இந்திய இறையாண்மை
சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன.
இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது
டுவிட்டர்
புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் கீழ்படிதல் மற்றும் குறைதீர்த்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பவை போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் புதிய விதிகளை பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஆனால், புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்து வந்தது. குறிப்பாக, கீழ்படிடல் மற்றும் குறைதீர்த்தல் அதிகாரியை நியமிக்காமல் டுவிட்டர் நிறுவனம் கால தாமதம் செய்து வந்தது.
எச்சரிக்கை
புதிய விதிகளை ஏற்கும் படியும் இல்லையே சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படியும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது.
ஆனால், புதிய விதிகளை ஏற்காததால் இந்தியாவில் சட்ட ரீதியிலான பாதுகாப்பை இழக்கும் சூழ்நிலைக்கு டுவிட்டர் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், டுவிட்டர் வலைதளத்தில் பயனாளர் பதிவிடும் கருத்துக்கு டுவிட்டர் நிறுவனமும் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சட்டரீதியிலான நடவடிக்கைகளையும் டுவிட்டர் நிறுவனம் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
நியமனம்
இந்த நிலையில், மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு கீழ்படிதல், குறைதீர்த்தல் தொடர்பாக இந்தியாவிற்கான இடைக்கால அதிகாரியை டுவிட்டர் நிறுவனம் நியமித்துள்ளது.
இந்த அதிகாரி டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பாலமாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அமைப்புகள் இந்த அதிகாரி மூலம் தங்களுக்கு தேவையான தரவுகளை டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம்-ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு கேட்கும் தரவுகளை டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தரவேண்டியது இந்த அதிகாரியின் பொறுப்பு ஆகும்.
புதிய சட்டங்களின்படி கீழ்படிதல், குறைதீர்த்தல் தொடர்பாக இந்தியாவிற்கான இடைக்கால அதிகாரி நியமிக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் டுவிட்டர் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.