டெல்லியில் சோனியாவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
1 min read
Chief Minister MK Stalin meets Sonia in Delhi
18.6.2021
டெல்லியில் சோனியாவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
சோனியாவுடன் சந்திப்பு
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
டெல்லியில் தங்கியிருந்த அவரை மாலை 7 மணி அளவில் இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர். சோனியாவை சந்திக்கும் திட்டம் அவரது பயணத்தில் இருந்தது. இந்த நிலையில், இன்ற காலையில் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். டெல்லியின் அக்பர் இல்லத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அவருடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றனர்.
புத்தகம் பரிசு
அவர்கள் இருவரையும் சோனியாவும், ராகுலும் வரவேற்றனர். சோனியாவுக்கு புத்தகம் ஒன்றை ஸ்டாலின் பரிசளித்தார். சோனியா முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ராகுலும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப்பின் முதன் முறையாக சோனியா மற்றும் ராகுலை ஸ்டாலின் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைந்து பணியாற்றுவோம்
சந்திப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.