மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும்; எடியூரப்பா பேட்டி
1 min read
The Meghadau Dam will be built with the permission of the Central Government; Edyurappa interview
18/6/2021
மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பா கூறினார்.
மேகதாது பகுதி
கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுகிறதா என ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்தது.
ஆனால், மேகதாது ஆய்வுக்குழு தொடர்பான இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகதாது பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உத்தரவிட்டது. அத்துடன், முறையான அனுமதியின்றி மேகதாது பகுதியில் எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது.
அணை கட்டுவோம்
இதுபற்றி பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்திற்கு மேகதாது திட்டம் முக்கியமான திட்டம் ஆகும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இனி, மத்திய அரசு அனுமதி கொடுத்ததும், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.