கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் வழங்க முடியாது; மத்திய அரசு தகவல்
1 min read
The families of the victims of the corona have been given Rs. 4 lakh cannot be provided; Federal Government Information
20.6.2021
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் கொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
வழக்கு
கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்மந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்துமாறு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்கும்படி, கடந்த மே 24-ல் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, ஒன்றிய அரசு 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரூ.4 லட்சம் வழங்க முடியாது
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது.
பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் குறிப்பிடப்பட்ட 12 பேரிடர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பெருந்தொற்றால் 3.85 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கடந்த காலங்களில் எந்தவொரு பேரிடரிலும் இல்லாத வகையில் பெருந்தொற்று பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.
எனவே ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால், மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். இழப்பீடு வழங்குவதன் மூலம் கூடுதல் நிதிச்சுமையால், சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.