பாரதீய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணி சரத்பவார் ஆலோசனை
1 min readNon-Congress Coalition Sergeant Adviser Against Bharatiya Janata Party
22/6/2021
வருகிற 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்க பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சரத்பவார்
தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சரத்பவார். இவர் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். மராட்டிய மாநிலத்தில் இவரது கட்சியின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி நடத்துகிறது.
இந்த நிலையில் வருகிற 2014 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதே நேரம் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்க சரத் பவார் திட்டமிட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
மேற்கு வங்காளத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், தேர்தல் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அதே போல் தமிழ்நாட்டிலும் தி.மு.க.வுக்கும் அவர்தான் ஆலோசகராக இருந்தார். இங்கும் தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
இதனால் பிரசாந்த் கிஷோருடன் சரத்பவார் ஆலோசனை நடத்தினார். பிரசாந்த் கிஷோர் அளித்த யோசனைப்படி, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ராஷ்டிரா மஞ்ச் என்ற ஐக்கிய எதிர்க்கட்சிகள் அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்க, காங்கிரஸ் அல்லாத 15 எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, மாற்றுசக்தியை உருவாக்க பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்து உள்ளார். இதுபற்றி நேற்று முன்தினமும் பிரசாந்த் கிஷோர், சரத்பவாரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் நேற்று பா.ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளின் கூட்டம் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. பா.ஜனதாவுக்கு எதிராக அணிசேரும் 15 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளன.
யார்-யார்?
பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி ,தேசிய மாநாட்டுத் தலைவர் ஒமர் அப்துல்லா முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சன் சிங், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பா.ஜனதாவில் இருந்து விலகிய சுதீந்திர குல்கர்னி, சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷ்யாம் திவாரி உள்ளிட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சற்றுமுன் சரத்பாவார் கூறும்போது மூன்றாவது முன்னணி கூட்டத்தை நாங்கள் நடத்தவில்லை என்றார்.
சிவசேனா
சரத்பவாரின் இந்த கூட்டத்தில் சிவசேனா பங்கேற்க வில்லை. இதுபற்றி சிவசேனாவின் சஞ்சய் ரவுத் கூறும்போது,
” இது சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லாததால் இது ஒரு எதிர்க்கட்சி கூட்டம் என்று நான் நம்பவில்லை. எதிர்க்கட்சியை ஒன்றிணைக்கும் முதல் முயற்சி இதுவாக இருக்கலாம்” என்றார்.