Avoid getting pregnant at 2 months; Physicians' instruction
13.7.2021
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வரும் ஜிகா வைரசிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜிகா வைரஸ்
கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஜிகா வைரஸ், ஏடிஸ் வகை கொசுக்களின் மூலம் பரவுகிறது. கேரளாவில் இதுவரை 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கர்ப்பிணிப்பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் கூறியதாவது:-
கர்ப்பிணி பெண்கள் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்குப் பயணம் செய்யாமலும், அங்கிருந்து வரும் மக்களுடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பத்தை தள்ளிப்போட வேண்டும்
ஜிகா வைரசுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை. எனவே, ஜிகா வைரஸ் பாதிப்புள்ள மாநிலங்களில் உள்ள தம்பதிகள் அல்லது அந்த மாநிலங்களுக்கு பயணம் செய்துவந்த தம்பதிகள் கர்ப்பம் தரிப்பதில் எச்சரிக்கையாக இருப்பதோடு, குறைந்தது இரண்டு மாதங்களாவது கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடுவது நல்லது. இல்லாவிட்டால் ஜிகா வைரசின் காரணமாக கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவதோடு குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக பகலில் கடிக்கும் கொசுக்களின் மூலம் ஜிகா வைரஸ் பரவுவதால், கொசுக்கள் கடிக்காதவாறு உடல் முழுவதையும் மூடி வைப்பது நல்லது.
இதுப்போன்ற தடுப்பு நடவடிக்கைகளை வீட்டிலேயே பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் உள்ள வீட்டில் கொசுக்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு திரையிட்டு மூடிவைத்துக்கொள்ளலாம்.
மருந்து
கொசுக்களை விரட்டுவதற்கான மருந்துகளை உபயோகிக்கலாம். ஆனால் சருமத்தில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தண்ணீரில் தான் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடும் என்பதால் வீடு மற்றும் அலுவலகத்திற்கு உள்ளே அல்லது வெளியே தேவையில்லாமல் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.