அனைத்து மாநில கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்; காங்கிரஸ் அறிவிப்பு
1 min read
All State Governor House siege struggle; Announcement of Congress
20/7/2021-
‛‛பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில கவர்னர் மாளிகை முன்பு அடையாள முற்றகைப் போராட்டம் நடத்தப்படும்,” என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஒட்டுக் கேட்பு விவகாரம்
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
பத்திரிகையாளர் சந்திப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாகவும், எந்தெந்த தலைவர்களைக் குறிவைத்து ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (ஜூலை 21) ஒவ்வொரு மாநிலத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும்.
போராட்டம்
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து மாநிலத்தின் கவர்னர் மாளிகை முன்பும், காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாள முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சமீபத்திய தகவலின்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் செல்போன், அவரின் அலுவலக ஊழியர்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தபோது, இந்த பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.