5 முறை போனை மாற்றியும் இன்றும் ஒட்டுக் கேட்கப்படுகிறது; பிரசாந்த் கிஷோர் பேட்டி
1 min read
Turns the phone 5 times and still listens today; Interview with Prashant Kishore
20/7/2021-
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், “எனது செல்போனை இதுவரை ஐந்து முறை மாற்றிவிட்டதாகவும் இருந்தாலும்கூட, இன்னும் எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது,” என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி கூறுகிறார்.
ஒட்டுக்கேட்பு
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகளும் பயங்கரவாதத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை இந்தியா அந்த உளவு மென்பொருளைக் கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் போனும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2014ல் பிரதமர் மோடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்ததுடன், நாடு முழுவதும் மோடி அலை, மோடி அலை எனபேசவும், ‛குஜராத் மாடல் வளர்ச்சி’ என்று அனைவரும் விவாதிக்கவும் வழிவகுத்தவர் பிரசாந்த் கிஷோர். அதன்பின்னர், சில கருத்துவேறுபாடால் பாரதீய ஜனதா உடனான தொடர்பை முறித்துக்கொண்ட அவர், சமீபகாலமாக பாரதீய ஜனதா எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் வியூக பணியாற்றி வெற்றி பெற செய்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் பேட்டி
பிரசாந்த் கிஷோரின் தொலைபேசியை கடந்த ஜூன் மாதத்தில் 14 நாட்களும், ஜூலை மாதத்தில் 12 நாட்களும் ஒட்டுக்கேட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்காவை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசிய 13ம் தேதியும் அவரின் போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
2017 முதல் 2021 வரையில் என் மொபைலில் ஒட்டுக்கேட்பு நடப்பதை உணரவில்லை. இந்த காலக்கட்டத்தில் 5 முறை போனை மாற்றிவிட்டேன். ஆனாலும் என் போன் ஒட்டுக்கேட்பு பிரச்சினை ஓயவில்லை. ஹேக் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.