பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
1 min read
Prosecution of Pastor George Ponnaya in 7 sections
23-7-2021
இந்து மதம், மற்றும் பாரத மாதா பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் தலைமறைவானார்.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
கன்னியா குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதை கண்டித்து அருமனையில் கடந்த 18-ந் தேதி நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், ” சேகர்பாபு எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும், சட்டையை கழற்றி கோவிலுக்குள் சென்றாலும் இந்துக்கள் தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். தி.மு.க. வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வான காந்தி செருப்பு அணியாமல் நடக்கிறார். அதற்கு பாரத மாதாவை செருப்பால் மிதிக்கமாட்டாராம். நாம் பாரத மாதாமீதான அசிங்கம் நம் மீது படாமல் இருப்பதற்காக ஷூ போட்டு நடக்கிறோம்” என்றார். மேலும் பிரதமர் மோடி, அமித் ஷா பற்றி தகாத வார்த்தைகளால் பேசி சாபமிட்டார்.
அவர் மீது தமிழகம் முழுதும் பல இடங்களில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அருமனை போலீசார், அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவு
இந்நிலையில், பாதிரியார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நான் பேசியது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என் இந்து சகோதர, சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்போம்” எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும் பாதிரியார் கைது செய்யப்படவில்லை. திடீரென அருமனையில் டி.ஐ.ஜி., பிரவின்குமார் தலைமையில் போலீசார் முகாமிட்டனர். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடல் வழியாக படகில் தப்பி விட்டதாகவும், முன்ஜாமின் கிடைத்த பின்தான் ஊர் திரும்புவார் எனவும் கூறப்பட்டது.
பாதிரியாரை உடனடியாக கைது செய்யா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக, இந்து மகா சபா உள்ளிட்ட பல அமைப்புகள் கூறியுள்ளன.