புதிய கல்விக் கொள்கை நாட்டின் விதியை வடிவமைக்கும்; பிரதமர் மோடி பேச்சு
1 min read
The new education policy will shape the destiny of the country; Prime Minister Modi’s speech
29.7.2021
நாட்டின் கல்விக்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளது. அது நாட்டின் விதியை வடிவமைக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மோடி கலந்துரையாடல்
தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு காணொலி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து மோடி பேசியதாவது:-
இந்தியாவில், வரலாற்று சிறப்புமிக்க கொள்கை சீர்திருத்தங்களில் ஒன்றான, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ஒட்டு மொத்த உலகமும், கொரோனாவினால் தடுமாறி கொண்டிருந்த போது, மத்திய அரசு, மாற்றத்திற்கான கொள்கையை கொண்டு வந்து உள்ளது. இந்த கல்விக்கொள்கையை களத்திற்கு கொண்டு வர பலர் கடுமையாக உழைத்துள்ளனர்.
படிப்படியாக…
கொரோனா காலத்தில், நாட்டின் கல்வி கட்டமைப்பில், தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளோம். அது, நாட்டின் விதியை வடிவமைக்கிறது.
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னாட்சி பெற்ற கல்வி அமைப்புகள் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று, கொரோனா காலத்தில், படிப்படியாக புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுகிறது. புதிய கல்வி கொள்கை மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம். நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்வி தான் நமது நாட்டின் எதிர்காலம். புதிய இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை மிக முக்கிய பங்களிப்பை அளித்து உள்ளது. நமது கல்வி கொள்கையை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும்.
புதிய கல்விக்கொள்கை மூலம் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். புதிய கல்விக்கொள்கையில் படிப்பவர்கள் எதிர்காலத்தை மிகத்தெளிவாக தெரிந்து கொள்வார்கள். நாட்டை வலிமையானதாக கட்டமைப்பதில் புதிய கல்வி கொள்கை முக்கிய பங்காற்றுகிறது. கொரோனா ஒட்டுமொத்த சூழலை மாற்றி உள்ளது. ஆன்லைன் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாணவர்கள் இந்த சூழலுக்கு ஏற்ப விரைவாக தங்களை தயார் படுத்தி கொண்டு உள்ளனர். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிய கல்விக்கொள்கை அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய பாதை
நமது இளைஞர்கள் மாற்றத்திற்கு முழுமையான அளவில் தயார் நிலையில் உள்ளனர்.எந்த இடத்திற்கு போனாலும் இக்கால இளைஞர்கள் உச்சத்தை தொடும் வகையில் புதிய கல்விக்கொள்கை அமைந்து உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நமது இளைஞர்கள் புதிய பாதையை காட்டுகின்றனர். 21ம் நூற்றாண்டில் இளைஞர்கள் தனித்துவமான செயலாக்கத்தை விரும்புகிறார்கள். பழைய கூண்டு மற்றும் திண்ணைகளில் இருந்து இளைஞர்களுக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. சுதந்திரம் பெற்றவர்களாகவும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும் இருப்பதையே நமது இளைஞர்கள் விரும்புகின்றனர். இதற்கான உத்தரவாதத்தை புதிய கல்விக்கொள்கை அளிப்பதுடன், நமது தேசம் ஆதரவு அளிக்கும் என்ற உத்தரவாதத்தையும் வழங்குகிறது. .
முன்னர் சிறந்த கல்விக்கு வெளிநாட்டிற்கு சென்றோம். தற்போது, வெளிநாட்டினர்நமது நாட்டிற்கு வருகின்றனர். இதனை கண்கூடாக பார்க்கிறோம். இதனை நமது பல்கலைகழகங்களில், நாம் கண்கூடாக பார்க்கிறோம். இளைஞர்கள் தங்களுக்கு தேவையான கல்வியை தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு மீதான பயத்தில் இருந்து விடுதலை அளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், நமது இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்புமிக்கதாக மாற்றுவதுடன், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பொருளாதாரமாக நமது நாடு மாறும். நமது நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 14 பொறியியல் கல்லூரிகள் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காள மொழிகளில் கல்வி வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.