நடிகர் விஜயைப்போல் தனுசுக்கும் ஐகோர்ட்டு கண்டனம்; “சாமானியர்கள் வரிக்கட்டும்போது கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்?”
1 min read
Sagittarius High Court condemns actor Vijay; “Why do you refuse to pay taxes when you buy a car when the common people are taxed?”
5/8/2021
இறக்குமதி சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கில், ‛சாமானியர்கள் வரிக்கட்டும்போது, கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி கட்டுவதை மறுக்கிறீர்கள்,’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் தனுசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
நடிகர் தனுசு வழக்கு
கடந்த 2015ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்தும், விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன்படி கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் 50 சதவீதம் வரி செலுத்தினால் காரைப் பதிவு செய்ய ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் ரூபாய் 30.33 லட்சம் வரி செலுத்தியதாக நடிகர் தனுஷ் கூறியதால் விதிகளைப் பின்பற்றிப் பதிவு செய்ய 2016ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் விசாரணை நடந்து வந்தது.
வரிக்கட்ட ஏன் மறுக்கிறீர்கள்?
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ‛சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமானிய மனிதர்கள் வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்? இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷ்க்கு ஒரு சட்டம் என்று இல்லை,’ என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் கூறினார்.
மேலும், மனுவில் நடிகர் என்பதை தெரிவிக்காமல் நுழைவு வரி விலக்கு கேட்டது ஏன் என்றும் தனுஷ்க்கு கேள்வி எழுப்பியதுடன், அதற்கு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, நுழைவு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக தனுஷ் தரப்பு கூறியதையும் ஏற்க மறுத்த நீதிபதி, தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை பிற்பகல் வணிகவரித்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
ஏற்கனவே சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அவரை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.