தொழில்துறை உற்பத்தியில் பீகார், உ.பி.யைவிட தமிழகம் மோசமாக உள்ளது ; வெள்ளை அறிக்கை விவரம்
1 min read
Tamil Nadu is worse than Bihar and UP in industrial production; White Paper Detail
9.8.2021
தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி பீகார், உத்தரப்பிரதேசத்தை விட மோசமாக உள்ளத என பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
வெள்ளை அறிக்கை
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.முதல்-அமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார்.
மேலும் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:-
- மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், அதன்பிறகு பல மடங்கு அதிகரித்தது; அ.தி.மு.க. அரசு கூறிய கடன் கணக்கு சரியாக இல்லை.
- தமிழ்நாட்டில் கடனுறுதி அளவு அதிகமுள்ள துறைகள் மின் வாரியம், போக்குவரத்து துறை; மின்சார வாரியத்திற்கு 90 சதவீதம் போக்குவரத்து துறைக்கு 5 சதவீத கடனுறுதி அளவு உள்ளது.
மின்வாரியம்
- மின்சாரத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின் வாரியத்தை விட பீகார் மின் வாரியம் நல்ல நிலையில் உள்ளது.
- தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி பீகார், உத்தரப்பிரதேசத்தை விட மோசமாக உள்ளது.
- நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது.
- 2008 – 09-ம் ஆண்டில் 13.35 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2020 – 21-ல் 8.7 சதவீதமாக வீழ்ச்சி .
- 15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தாமல் இருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மராட்டியம் போன்ற மாநிலங்களைப் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் மின்சாரம் சார்ந்த வரிகள் குறைவாக உள்ளது.
தொழில் உற்பத்தி
- தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி 4.65 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது
- ஒருநாள் வட்டியாக ரூ.87.31 கோடியை தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.
- 69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்ற.
- மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன; 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரி மாற்றியமைக்கப்படவில்லை.
- 2021 – 22ல் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கி ரூ.20,033 கோடியாக உள்ளது
- வரி இல்லை என்றால் பணக்காரர்களே பயனடைவார்கள், ஏழைகள் பயனடைய மாட்டார்கள்.
- குடிநீர் வடிகால் வாரியத்திற்கும், மின் வாரியத்துக்கும் உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள கடன் ரூ.1,743.30 கோடி.
- கார்ப்பரேட்டுகளுக்கான வரிவருவாய் விகிதத்தை ஒன்றிய அரசு குறைத்ததால் மாநிலங்களுக்கு பாதிப்பு
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.