இமாச்சாலபிரதேச நிலச்சரிவில் 10 பேர் பலி; 14 பேர் மீட்பு
1 min read
10 killed in Himachal Pradesh landslide; Rescue of 14 people
11.8.2021
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மீட்கப்பட்டனர்.
நிலச்சரிவு
இமாசலபிரதேச மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நெடுச்சாலையில் இன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. ராம்பூர்-ஜூரி பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், மலைப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் மீது விழுந்தது. மேலும், மண்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீதும் விழுந்தது.
இந்த நிலச்சரிவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் கார் சிக்கிக்கொண்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு படையினர் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 பேர் சாவு
இந்த நிலையில், பஸ்சில் 25 முதல் 30 பேர் வரை இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். டிரைவர் உட்பட 14பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு இந்தோ திபெத்திய எல்லை போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்து உள்ளனர்.