எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்
1 min read
SB Velumani’s bank account frozen
12.8.2021
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடக்கியுள்ளனர்.
முறைகேடு புகார்
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருடைய சகோதரர்களான அன்பரசன், செந்தில்குமார், மற்றும் நெருக்கமான நண்பர்களான சந்திரசேகர், சந்திரபிரகாஷ், மைத்துனர் சண்முகராஜா ஆகியோரது வீடுகள் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
ஆவணங்கள்
இந்த நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று 2-வது நாளாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிடைத்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
வங்கி கணக்கு முடக்கம்
இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஎஸ்.பி. வேலுமணியில் வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடக்கியுள்ளனர். எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடத்திய சோதனையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், சோதனையில் பறிமுதல் செய்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.