தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை; சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்
1 min read
There are no fake Govshield vaccines in Tamil Nadu; Health Secretary Information
21.8.2021
தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போலி தடுப்பூசி
இன்று 6.93 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வர உள்ளது. இதுவரை 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. பல நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்ததில் ஒரு சதவிகிதம் நபர்களுக்கு மட்டுமே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற 17 மாவட்டங்களில் 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது அதிகளவு தடுப்பூசிகள் இருப்பதால் பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்து தான் தடுப்பூசிகளைப் பெறுகிறோம். தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் தடுப்பூசிகளை பதிவு செய்து கண்காணிக்கிறோம். மராட்டியம், கொல்கத்தா போன்ற பகுதிகளில்தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் விடுபட்ட முதியவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த இருக்கிறோம். இரண்டாம் தவணை தடுப்பூசியில் 10 லட்சம் பேர் கோவிஷீல்டு மற்றும் 3.5 லட்சம் பேர் கோவாக்சின் செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என கூறினார்.