ஆப்பானிஸ்தானில் இருந்து மீட்ககோரி 2 ஆயிரம் செல்போன் அழைப்புகள்
1 min read
2 thousand cell phone calls to recover from Afghanistan
22.8.2021
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை மீட்பது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு பிரிவிற்கு கடந்த 5 நாட்களில் 2 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன.
அவதியுறும் மக்கள்
ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரம் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கு அவதி அடைந்து வருகிறார்கள். உயிருக்கு அஞ்சி, மக்கள் வெளியேறி வருகின்றனர். அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக அழைத்து வர ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
தூதரகத்தில் பணியாற்றிய 200 இந்தியர்கள் சமீபத்தில் பத்திரமாக நாடு திரும்பினர். காபூலில் உள்ள குருத்வாராவில் 200 சீக்கியர்கள் அடைக்கலம் புகுந்தனர்.
இந்நிலையில், காபூலில் இருந்து 168 பேருடன் விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் இன்று டெல்லி அருகே உள்ள விமானப்படை தளத்திற்கு வந்தது. மீட்கப்பட்டவர்களில் 2 பேர் ஆப்கன் எம்.பி.,க்கள் மற்றும் 24 பேர் ஆப்கனை சேர்ந்த சீக்கியர்கள். இவர்கள், காபூலில் உள்ள குருத்வாராவில் தஞ்சமடைந்தவர்கள் ஆவார்கள்.
முன்னதாக, ஆப்கனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களுடன் ஏர் இந்தியா, விஸ்தாரா, மற்றும் இண்டிகோ விமானங்களும் டெல்லியில் தரையிறங்கின. இந்த விமானங்கள், காபூலில் இந்தியர்களை ஏற்றி கொண்டு, தஜகிஸ்தான் தலைநகர் துஷான்பே மற்றும் கத்தாரின் தோஹாவில் தரையிறங்கியது.
தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி டெல்லி வந்தது.
தினமும் 2 விமானம்
ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு தினமும் காபூலில் இருந்து இரண்டு விமானங்களை இயக்கி கொள்வதற்கு, காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள நேடோ படைகள் இந்தியாவிற்கு அனுமதி வழங்கி உள்ளது.
2 ஆயிரம் அழைப்புகள்
மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ஆப்கனில் இந்தியர்களை மீட்பது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு பிரிவிற்கு கடந்த 5 நாட்களில் 2 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. வாட்ஸ் ஆப் மூலம் வந்த 6 ஆயிரம் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இமெயில் அனுப்பிய 1200 பேருக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.