இல.கணேசன் சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார்
1 min read
Ila Ganesan received blessings from Sankaracharya
24.8.2021
மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசன் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார். அவர் வருகிற 27-ந் தேதி கவர்னராக பொறுப்பு ஏற்கிறார்.
இல.கணேசன்
மணிப்பூர் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ள தமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் இல.கணேசன் ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன்பின் இல.கணேசன் கூறியதாவது:-
நான் அரசு பணியை ராஜினாமா செய்து 52 ஆண்டு காலம் பொதுப்பணியில் ஈடுபட்டிருந்தேன். அதற்கான அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கள் குடும்பம் சங்கர மடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டது. இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளதால் காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்தேன்.
வருகிற 26-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு 27-ந் மணிப்பூர் கவர்னராக பொறுப்பேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜினாமா
இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ. அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த இல.கணேசன் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலையிடம் பாரதீய ஜனதாவில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.