பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு – ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
1 min read
Rs 516 crore misappropriation of crop loan waiver – I. Periyasamy accused
25.8.2021
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ம் தேதி நிதிலை அறிக்கையும், 14ம் தேதி வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது:-
ரூ.516 கோடி முறைகேடு
பயிர்கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 81 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டிருக்கிறது. சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வழங்க வேண்டிய கடனை விட பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் மூலம் ரூ.516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது.
சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் 503 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம் போட்டு தள்ளுபடி செய்திருப்பதாகவும், பயிர்க்கடன் வழங்கும் போது கூட்டுறவு சங்கங்கள் ஏனைய வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 66 விவசாயிகளுக்கு பிப்ரவரி 21ம் தேதி 54.50 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் 12 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 2698 உறுப்பினர்களுக்கு ரூ.4.96 கோடி மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலையில் ரூ.16.70 கோடிவழங்கப்பட்டுள்ளது.
செல்லூர் ராஜு
முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஊரான கோச்சடையில் கூட அதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளது. 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 13.91 லட்சம் பேர் பல வங்கிகளில் ரூ.5,896 கோடி கடன் பெற்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியல் தயார் செய்துவருவதாகவும் தகுதியுள்ள நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவை முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்.
வட்டி குறைப்பு
மேலும் கூட்டுறவு சங்கங்களில் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களின் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக ஆக குறைக்கப்படும் எனவும் கடன் வரம்பு 12 லட்சமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே தமிழ்நாடு தொழிலக கூட்டுறவு வங்கியில் சிறு குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகள் வைத்து ரூ.7 கோடி மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பயிர்க்கடனில் மோசடி நடந்திருப்பதாக ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.