ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது
1 min read
The United States launched an offensive in Afghanistan
28/8/2021
ஐ.எஸ். தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.
ஐ.எஸ். பயங்கரவாதம்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.
இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பயங்கரவாதியால் கடந்த வியாழக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாக்குதல் நடத்தியவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என எச்சரிக்கைவிடுத்தார்.
தாக்குதலை தொடங்கியது
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று தாக்குதலை தொடங்கியது. அந்நட்டின் நங்ஹகர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். ஹரசன் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா டிரோன் விமானம் மூலம் அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இந்த வான்வெளி தாக்குதலில் இலக்கை வெற்றிகரமாக கொன்றுவிட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வரும் 31-ம் தேதி முழுவதும் வெளியேற உள்ள நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
வெளியேற உத்தரவு
மேலும், காபூல் விமான நிலையத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.