காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி மரணம்
1 min read
Kashmir separatist leader Syed Ali Shah Gilani dies
2.9.2021
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பிரிவினைவாத தலைவர்
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி( வயது 92) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
கிலானியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கிலானி மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்றும், இணைய சேவை துண்டிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
கிலானி மறைவுக்கு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்பு
கிலானி தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்தார். பின் பிரிவினைவாத சார்பு கட்சிகளின் கூட்டமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹூரியத் அமைப்பை நிறுவினார். அதனை தொடர்ந்து, அனைத்துக் கட்சி ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய நிலையில், 2020-இல் அப்பொறுப்பிலிருந்து விலகினார்.
கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.