10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி
1 min read
Confirmation of corona infection in 10th grade student
3.9.2021
நாமக்கல் அரசு உயர்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்-லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ஊரடங்கு தளர்வில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளும், 5 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகளும் கடந்த 1-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. பள்ளி வளாகங்களிலும் முழுமையான தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மாணவிக்கு கொரோனா
இந்நிலையில், பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.