நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை
1 min read
Jail for 5 IAS officers in contempt of court case
3.9.2021
விவசாயிக்கு இழப்பீடு தொகை வழங்குமாறு அளித்த நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு அபராதத்துடன் சிறை தண்டனையும் வழங்கி ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகை
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் எரகுண்டா கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தலபகா சவித்ரமா. இவரின் கணவருக்கு சொந்தமான 3 ஏக்கர் பட்டா நிலத்தை, தேசிய மனநல இன்ஸ்டிடியூட் அமைப்பதற்காக வருவாய் அதிகாரிகள் கையகப்படுத்தினர். இதற்கு முறைப்படி தகவலும், இழப்பீடு தொகையையும் அதிகாரிகள் வழங்கவில்லை.
இதனால் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி முறையிட்ட நிலையில் 2016 டிசம்பரில், விவசாயிக்கு உரிய இழப்பீடு தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
சிறைதண்டனை
ஆனால் வாக்குறுதிப்படி அதிகாரிகள் நடந்து கொள்ளாததால் 2017ல் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தலபகா சவித்ரமா, ரிட் மனுவை தாக்கல் செய்தார். 2017 பிப்ரவரி 10ம் தேதி தலபகா சவித்ரமாவுக்கு உரிய இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவையும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மெத்தனமாக செயல்பட்ட பணியில் உள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், ஓய்வு பெற்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முதன்மை நிதிச் செயலர் சம்ஷெர் சிங் ராவத், முதல்வரின் கூடுதல் செயலர் ரெவு முத்யல ராஜூ (இவரும் நெல்லூர் கலெக்டராக பணியாற்றியவர்), நெல்லூர் மாவட்ட கலெக்டர் சக்ரதர பாபு மற்றும் முன்னாள் நெல்லூர் கலெக்டர் சேஷகிரி பாபு ஆகிய நான்கு அதிகாரிகள், 2017ல் முதன்மை நிதிச்செயலராக இருந்து ஓய்வு பெற்ற மன்மோகன் சிங் எனும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆகியோருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.