தங்கத்தை உற்பத்தி செய்யும் உலகின் தனித்துவமான நதிகள்
1 min read
சேகரிக்கப்பட்ட தங்க துகள்கள்
Distinctive rivers of the world producing gold
மனிதனுக்கு நதியுடன் ஆழமான தொடர்பு உள்ளது. இதன் காரணமாகவே பழங்காலத்தில் ஆற்றங்கரையில் பெரும்பாலான நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றின் நீரானது முக்கியமாக விவசாயப் பணிகள், குடிநீர் மற்றும் மின்சாரம் உற்பத்தி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் தங்கத்தை உற்பத்தி செய்யும் ஆறுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?
சுபர்நரேகா நதி : ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் ஓடும் சுபர்நரேகா நதியின் நீரிலிருந்து தங்கம் கிடைக்கிறது. ஜார்க்கண்டில் உள்ள தமாத் மற்றும் சரந்தா போன்ற இடங்களில், உள்ளூர் பழங்குடியினர் சுபர்நரேகா ஆற்றின் மணலை வடிகட்டி தங்கத் துகள்களைச் சேகரிக்கின்றனர். பொதுவாக, ஒரு நபர் நாள் முழுவதும் தேடினால் ஒன்று அல்லது இரண்டு துகள்களை மட்டுமே பெற முடியும், ஒரு மாதத்தில் 60 முதல் 80 தங்கத் துகள்களை பெறலாம். இந்த துகள்கள் அரிசி தானியங்களை விட சற்று பெரியவை.
பொதுவாக ஆண்டு முழுவதும் ஆற்றில் இந்த தங்க துகள்கள் கிடைத்தாலும், வெள்ளத்தின் போது மட்டும், இந்த தங்கம் தோண்டும் பணிகள் நடைபெறாது.. மணலில் இருந்து தங்கத்தை எடுப்பவர்களுக்கு ஒரு துகளுக்கு 80 முதல் 100 ரூபாய் கிடைக்கும். இருப்பினும், சந்தையில் ஒரு துகளின் விலை சுமார் 300 ரூபாய் அல்லது அதற்கு மேல் உள்ளது.. இந்த தங்கத் துகள்களை விற்பதன் மூலம், ஒரு நபர், ஒரு மாதத்தில் 5 முதல் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். உள்ளூர் தரகர்கள் மற்றும் தங்கத் தொழிலாளர்கள் பழங்குடி குடும்பங்கள் சேகரிக்கும் தங்கத் துகள்களை வாங்கி வெளியே விற்று நல்ல லாபம் பார்க்கின்றனர்..
கரகாரி ஆறு (ஜார்க்கண்ட்) சுபர்நரேகா நதியைப் போலவே, அதன் துணை நதியான “கரகாரி” ஆற்றின் மணலில் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன. சுபர்நரேகா ஆற்றில் உள்ள தங்கத் துகள்கள் கரகரி ஆற்றின் வழியாக சென்றடைகின்றன என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் அதைப் பற்றி தெளிவான ஆதாரம் இல்லை. கரகாரி ஆற்றின் நீளம் 37 கிமீ மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
க்ளோண்டிகே ஆறு (கனடா) கனடாவின் டாசன் நகரில் ஓடும் க்ளோண்டிகே ஆற்றில் இருந்தும் தங்கம் எடுக்கப்படுகிறது. 1896 ஆம் ஆண்டில், ஜார்ஜ் கார்மாக், டாசன் சார்லி மற்றும் ஜிம் மேசன் ஆகியோர் முதலில் இந்த ஆற்றில் தங்கம் இருப்பதாகக் கூறினார். முதலில், க்ளோண்டிகே ஆற்றின் உறைந்த மணல் வாளிகளில் சேகரிக்கப்பட்டு அது பல முறை வடிகட்டப்படுகிறது. அதன் பிறகு ஆற்றின் நீர் சிறிய பாத்திரங்களில் ஊற்றப்படும் பனிக்கட்டியாக மாற்றப்படுகிறது. இறுதியில், தங்கத்தின் துண்டுகள் அந்தப் பனியிலிருந்து பிரிக்கப்படுகின்றன. இந்த தங்கத் துண்டுகள் பல வடிவங்களில் உள்ளன. சில துண்டுகள் முத்துக்களைப் போலவும், சில துண்டுகள் செதில்களாகவும் இருக்கும். இந்த ஆற்றில் தங்கத்தைக் கண்டுபிடிப்பதற்கு எந்த தடையும் இல்லை.