June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்; சேகர்பாபு வேண்டுகோள்

1 min read

Do not do politics with God; Sekarbabu’s request

6.9.2021

‛‛கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்,” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேகர்பாபு பேட்டி

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். இது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன.
கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரும் சாமியின் திருப்பெயரைக் கொண்டிருக்கிறார்.

இறைவனை முன்னிறுத்தி அரசியல் செய்து, அதன் வாயிலாகத் தேவையில்லாத சட்டம் – ஒழுங்கு பிரச்னையை உருவாக்குவது, ஒன்றாக வாழுகின்ற மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற செயல்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். யாரையும் வழிபட வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்தே சிறப்பாக வழிபடலாம். விநாயகர் வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார். விநாயகர் அகவல் அனைவருக்கும் நன்மைகளைச் செய்யும்.

கொரோனா மூன்றாவது அலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில்தான் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.