இந்தியாவில் 27,176 பேருக்கு கொரோனா; 284 பேர் சாவு
1 min read
Corona for 27,176 people in India; 284 deaths
15.9.2021
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 284 பேர் இறந்துள்ளததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 33 லட்சத்து 16 ஆயிரத்து 755 ஆக உயர்ந்தது.
கேரளாவை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கேரளாவிலும் பாதிப்பு சரியத் தொடங்கி உள்ளது. அங்கு கடந்த வாரம் வரை தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது 15 ஆயிரமாக உள்ளது.
அங்கு நேற்று 15,876 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் 15.12 சதவீதமாக சரிந்துள்ளது. இதுதவிர மகாராஷ்டிராவில் 3,530, தமிழ்நாட்டில் 1,591, ஆந்திராவில் 1,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிசோரம்
இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அங்கு புதிதாக 1,185 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அங்கு சில நாட்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் படிப்படியாக உயர்ந்து 2 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இருப்பது அம்மாநில சுகாதாரத்துறையினரை கவலை அடைய செய்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 129, மகாராஷ்டிராவில் 52 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 284 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,43,497 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,221 பேர் அடங்குவர்.
கொரோனா பாதிப்பை விட நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த வகையில் நேற்று 38,012 பேர் நோயின் பிடியில் இருந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 22 ஆயிரத்து 171 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 3,51,087 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தடுப்பூசி
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 61,15,690 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியே 89 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 16,10,829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மொத்த பரிசோதனை எண்ணிக்கை 54.60 கோடியாக உயர்ந்துள்ளது.