கண்ணாயிரத்தை கலங்கவைத்த பாகற்காய் / நகைச்சுவைசிறுகதை
1 min read
Kannayiram with pitterguard / Story by Tabasukumar
19/9/2021
கடத்தப்பட்ட கோடாங்கியை கண்ணாயிரம் உதவியுடன் போலீசார் மீட்ட தகவல் ஊரெல்லாம் பரவியது. போலீஸ்நிலையத்திலிருந்து வெளியே வந்த கண்ணாயிரம் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். இளைஞர் படை அவர் பின்னால் வந்தது. அவர்களை கண்ணாயிரம் போங்க போங்க நான் தனியா வீட்டுக்கு போய் விடுகிறேன் என்றார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கண்ணாயிரத்தை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
கண்ணாயிரம் மனைவி ஏங்க இவ்வளவு நேரம் என்று கேட்டார். கண்ணாயிரம் நடந்த கதையை சொன்னார். அவர் அப்படியா என்று வாய்பிளந்தார். கோடாங்கியிடம் இருந்து தப்பித்தோம் என்றார். கண்ணாயிரம் எல்லாம் என் புத்திசாலித்தனம்தான் தெரியுமா என்று தன்தோளை தானேதட்டிக்கொண்டார்.
அவர் மனைவி சரி, சரி, வந்து சாப்பிடுங்க என்றார். கண்ணாயிரம் கைகால்களை கழுவிட்டுவந்து சாப்பிட அமர்ந்தார். பருப்பு சாம்பார், பாகற்காய் பொரியல். பொன்னி அரிசி சாப்பாடு.
கண்ணாயிரத்துக்கு பாகற்காய் என்றால் பிடிக்காது. மனைவியிடம் கோபத்துடன் என்ன பாகற்காய் பொரியல் வச்சிருக்கே என்று கேட்டார். அவர் மனைவி.. என்னங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு சுகர் வந்துட்டாம். பாகற்காய் கூட்டு, பாகற்காய் பொரியல் என்று அவர் மனைவி கொடுக்கிறார் தெரியுமா என்றார். கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏய் பக்கத்து வீட்டுக்காரருக்கு சுகர் இருக்கு. அதனால பாகற்காய் பொரியல் கொடுக்காங்க சரி. எனக்கு சுகர் இல்லையே. மறுபடி எனக்கு எதற்கு பாகற்காய் பொரியல் என்று கேட்டார். அவர் மனைவி ஏங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு கொரனா வந்துச்சு கபசுரகுடிநீர் குடிச்சார். உங்களுக்கு கொரனா வரவில்லை. ஆனாலும் நீங்க கபசுரகுடிநீர் குடிச்சியல்லா. ஏன் பதில் சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் விழிபிதுங்கியபடி, கொரானா பரவக்கூடியது. அதனால பக்கத்துவீட்டிலிருந்து பரவிட க் கூடாது என்று கபசுரகுடிநீர் குடித்தேன்.சுகர் அப்படி இல்லையே. அது பக்கத்து வீட்டுக்கு பரவாது. எனக்கு சுகர் இல்ல. அதனால பாகற்காய் பொரியல் வேண்டாம். என்றார்.
உடனே அவர் மனைவி உங்களுக்கு சுகர் இல்லைன்னு எப்படி தெரியும் என்று கேட்டார். கண்ணாயிரம் அசராமல் எனக்கு சுகர் கிடையாது. அவ்வளவுதான் என்று கோபத்தில் சொன்னார். அவர் மனைவி பிடித்துகொண்டார். ஒரு பாகற்காயிக்கு இப்படி கோபம் வருதே. சுகர் இருந்தா சாதாரண விசியத்துக்கும் கோபம் வருமாம். உங்களுக்கு கோபம் வருது. அதனால கண்டிப்பா சுகர் இருக்கும். பேசாம பாகற்காய் பொரியல் சாப்பிடுங்க. காலையிலே வாக்கிங் போங்க. வியர்வை நல்லாவெளியேறணும் சரியா என்றார்.
வாக்கிங் போனா நாய்துரத்துமே என்றார் கண்ணாயிரம். அதற்கு அவர் பக்கத்து வீட்டுக்காரர் வாக்கிங் போறாரு. நாய் கடிச்சுதா. நாயி வந்தா ஒதுங்கி போகணும். அதை பயங்காட்டக்கூடாது. புரியுதா என்று கேட்டார்.
கண்ணாயிரம் தலையை சொரிந்துகொண்டு இதுக்கு மாற்றுவழி இல்லையா என்று கேட்டார்.
ம்.. இல்லைவே இல்லே. எல்லாம் உங்கள் உடம்பு நன்மைக்குதான் என்றார் அவர் மனைவி.
கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. ஆனால் அதைவெளிக்காட்டினால் சுகர் அதிகமாகிவிட்டது என்று சோற்றையும் கட் பண்ணிடக்கூடாது என்று நினைத்தார். சத்தம் காட்டாமல் சாப்பிட்டார். பாகற்காய் பொரியலை தொடவில்லை. அதை பார்த்த அவர்மனைவிசத்தம்போட்டார். கண்ணாயிரம் கண்ணீர் கசிய பாகற்காய் பொரியலை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட்டார். வாரத்துக்கு ஒருநாள் மட்டும் பாகற்காய் பொரியல்வை என்றார் கண்ணாயிரம்.
அவர் மனைவி… ம்… மதியம் சாப்பாட்டுடன் பாகற்காய் பொரியல் கட்டாயம் உண்டு என்றார். கண்ணாயிரம் மனசுக்குள் மதியம் சாப்பாட்டுடன் பாகற்காய்பொரியல் கட்பண்ணிடவேண்டியது தான் என்று நினைத்து கொண்டார்.
அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு கண்ணாயிரம் எழுந்தார். நாளைக்கு காலையிலே வாக்கிங் வேற போகணும். சீக்கிரம் போய்படுப்போம் என்று நினைத்தபடி படுக்கை அறைக்கு சென்றார்.
அவர் மனைவி ஏங்க சாப்பிட்டவுடன்படுக்ககூடாது என்றார் கண்ணாயிரம் மெல்ல யார் சொன்னா என்றார். கண்ணாயிரம் மனைவி ஒருபுத்தகத்தை எடுத்துகாட்டினார். அதில் நீரழிவுநோயை கட்டுப்படுத்துவது எப்படி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. போச்சு டா அதில் உள்ளதை எல்லாம் இனி சொல்வாளே என்ன செய்யலாம் என்று யோசித்தார் இருந்தார். ஒருமணி நேரம் அமைதியாக இருந்தார் கொட்டாவி கண்ணைகட்டியது. சாப்பிட்டவுடன் மதியம் ஒருதூக்கம் போட்டாதான் நல்லா இருக்கும் என்றபடி படுத்தார். குறட்டை பலமாக கேட்டது. கண்ணாயிரம் மனைவியும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் படுத்துவிட்டார்.
மாலை ஆறுமணிக்கு கண்ணாயிரம் எழுந்தார். காபி என்றார். அவர் மனைவி ஏங்க உங்களுக்கு ஐம்பது வயதாகிவிட்டது. இனி காபி கிடையாது. சுகர் அதிகமாகிவிடும் என்றார்.
கண்ணாயிரம் எனக்குதான்சுகர் இல்லையே என்றார். அதற்கு அவர்மனைவி செக்பண்ணாம எப்படி சொல்லமுடியும் நாளைக்கு டாக்டருக்கிட்ட செக்பண்ணிட்டு முடிவுசெய்வோம் என்றார்.
கண்ணாயிரத்துக்கு தலைசுற்றியது. டாக்டரிடம் செக் பண்ணிட்டு அவர் எதுவும் சொன்னா என்ன ஆவுறது. ஒருவாரம் கழித்து டாக்டரிடம் செக் பண்ணுவோம் என்றார் கண்ணாயிரம். ஒருவார்த்தைலே சாப்பிடவேண்டியதை எல்லாம் சாப்பிடவேண்டியதுதான் என்று நினைத்து கொண்டார்.
ஆனால் அவர் மனைவி பிடிவாதமாக ஒருவாரம் வரை பொறுக்கமுடியாது. நாளைக்கு காலையிலே நீங்க வாக்கிங் போகணும். போயிட்டு வந்தவுடன் டாக்டருக்கிட்ட செக்கப்பண்ணணும். அப்புறம்தான் உங்களுக்கு டீ, காபி. இதிலே எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லி விட்டார். கண்ணாயிரம் எழுந்து போய் இரண்டு டம்ளர் தண்ணீய எடுத்து மடக்மடக் என்று குடித்தார்.
வாக்கிங் காலையில் போறதுக்கு பதில் மாலையில் போகட்டும் என்று கண்ணாயிரம் கேட்டார். அவர் மனைவி கொஞ்சம்பொறுங்க புத்தகத்தை பார்த்து சொல்லுறேன் என்று புத்தகத்தை எடுத்து படித்தார். காலையில் வாக்கிங் செல்வதுமிக்க நலம் என்று போட்டிருக்க என்றார்
கண்ணாயிரம் அது பழைய பதிப்பாக இருக்கும் என்றார். இல்லை, இல்லை புதுபதிப்புதான் என்று அவர்மனைவி சொன்னார். கண்ணாயிரம் பதில்சொல்லாமல் விழித்தார்.
-தபசுகுமார்