ஐஎஸ் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 25 தலிபான்கள் பலி
1 min read
25 Taliban killed in IS bombing
20/9/2021
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் முன்னதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 25 தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கொல்லப்பட்டதாக ஐஎஸ் அமைப்பு தகவல் அளித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பு
ஐஎஸ், தாலிபான் ஆகிய இரு பயங்கரவாத அமைப்புகளும் சன்னி இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவை. ஆனால் மதக் கொள்கைகளில் இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்குள் கருத்து வேறுபாடு உண்டு.
இதன்விளைவாக இந்த இரண்டு அமைப்பினரும் அவ்வப்போது வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருவது வழக்கம். சமீபத்தில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு 20 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
இதனையடுத்து ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது.
25 பேர் சாவு
ஜலாலாபாத் நகரில் ஐஎஸ் அமைப்பு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் பல்வேறு இடங்களில் இதுபோல வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. தலிபான்களின் வாகனங்களிலும் குண்டுகள் பொருத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த தாலிபான்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அளித்துள்ளது. தலிபான் பயங்கரவாத அமைப்புக்கே தற்போது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது பலரை வியக்க வைத்துள்ளது.