புதுச்சேரி விமானநிலையத்துக்கு தமிழக நிலம்
1 min read
amil Nadu land for Puducherry Airport
20.9.2021
புதுச்சேரி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு தமிழக நிலம் எடுக்கப்படுகிறது.
விமானநிலையம்
புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்குள்ள ஓடுதளம் 1,502 மீட்டர் மட்டுமே கொண்டது. இதில் சிறு விமானங்கள் மட்டுமே வந்துசெல்ல முடியும். ஓடுதளம் 3,300 மீட்டர் இருந்தால்தான் பெரியரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்காக கூடுதலாக 1,800 மீட்டர் ஓடுதளம் அமைக்க 240 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
தமிழக நிலம்
இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழ்நாடு பகுதிகளான விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுக்காவைச் சேர்ந்த மொரட்டாண்டி, ஆரோவில் பகுதியில் கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி எடுக்கும் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இதற்கான கூட்டத்தை விமான நிலையத்தில் நடத்தியிருந்தார்.
கவர்னர் தமிழிசையும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி, நிலம் கையகப்படுத்தி வழங்க கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கவர்னர் தமிழிசை வலியுறுத்தினார். விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகப் புதுவை அரசு சார்பில் மத்திய அரசிடம் விளக்கப்பட்டது.
விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக 106 ஏக்கர் நிலத்தைப் புதுவை அரசுக்குக் கையகப்படுத்தி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. விழுப்புரம் கலெக்டரிடம் தொலைபேசியில் பேசியபோது, நில ஆர்ஜித நடவடிக்கையைத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஆர்ஜிதம் செய்த பின்பு அதற்கான தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.